
துவரம் பருப்பையும் பயத்தம் பருப்பையும்
கலந்து ஒண்ணுக்கு ஒண்றை
தண்ணி ஊத்தி (தனியா) வேக வச்சி, சிலுக்க…
கடுகு உளுத்தம் பருப்பு வெடிக்க தாளிச்சி
சிட்டிகை மஞ்சள் பொடி தூவி
நெடுக்கால வெட்டின சின்ன வெங்காயத்தை கொட்டி வதக்கி…..
நாட்டு தக்காளி வெட்டி போட்டு
கத்தறிக்கா முறுங்கக்காய் வதக்கி
கறிவேப்பிலை (கொஞ்சம்) கிள்ளி போட்டு
தக்காளி மசிய…..
நாலு கொட்ட (புது)புளிய தண்ணில கரைச்சி
மசிச்ச பருப்ப வெங்காய தக்காளியோட கொட்டி..
புளி கரைசலை ஊத்தி...
ரெண்டு கொதி வந்து இறக்கி வச்சி
அதன் தலைல - நாலு கொத்த மல்லி தழைய போட்டு
இறக்கி எடுத்தா, இட்லி சாம்பார்…..
மணக்க… மணக்க…
எத்தனை முறை / விதமாய் முயன்றாலும்
கைக்கெட்டாமல் போனது
அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போன அன்று...
பள்ளி செல்லும் வழியில் - குளத்து
படித்துறை மேல்
அப்பாவுக்கு அருகில்....
காக்கி கால் சட்டையில் சப்பனமிட்டு உண்ட
மந்தார இலை - மனோன்மனி
அக்காக் கடை இட்லி சாம்பாரின் சுவையும் மணமும்…..