குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை வரிசையில் ஆறாம் தினையாக ஆண்..... ஆணும், அவன் சார்ந்த உலகமும்...
Saturday, July 12, 2008
உள் நாக்கு…..
எழுதிவிட வேண்டும்
இந்த காய்ச்சலோடு….
சூட்டோடு சூடாய்……
>----------<
அனுசு அக்கா கடைக்கு எதிர் வீடுதான்
ஈயடிச்சாமூட்டு கிழவி வீடு
கூன் விழுந்த முதுகும்
நல்ல பாம்பு தோலைப் போல - சுருங்கிய தோலும்
தொங்கட்டான் காதும்
வட்டப் பொட்டும்
புகையிலைக் கறை படிந்து தேய்ந்து போன பற்களும்
கவர்மென்ட்டு புடவையும்
தெய்வீக சிரிப்புமாய்……
இது போன்ற காய்ச்சல் வேளையில்
என்னை கிழக்கு நோக்கி அமர வைத்து
சிறிதே செந்தூரம் எடுத்து
உச்சந்தலை நடு முடி தேடி
நாற் புறமும் நன்றாக சுழற்றி
“படக்” சத்தம் வரும் வர இழுத்துப் போவாள்..
என் அம்மா தரும் வெத்திலை பாக்கு காசை மறுத்து…
அந்த காய்ச்சல் உள் நாக்கு எல்லாவற்றையும் தன்னுடன்………..
>----------<
இவ்வளவு வேதனையிலும்
ஆளில்லா அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
மொழி தெரியா உலகத்தில்…
காய்ச்சல் களைப்பில்
காலையில் கண்ணாடியில் தெரிந்த உள் நாக்கு வளர்ச்சிக்குப் பிறகு
தேடிக் கொண்டிருக்கிறேன்
இந்த மானுட வெளியில்...
உள் நாக்கு எடுத்துவிட
கிழக்கு நோக்கி அமர்ந்து
அந்த கிழவியையும் – அவள் கையில்
இராமர் சிவப்பாய் அந்த செந்தூரத்தையும்………….
ஓவியம்
அற்புதமாய் வரைந்திருந்தான்
அந்த ஓவியன்
எல்லோருக்கும் புரியும் படியாய்
தெள்ள தெளிவாய்
வண்ணக் கலவையாய்
கலை கோப்பாய் - சமவிகிதத்தில்
கசங்கிய கலை பெட்டகமாய்
கணக்கிலடங்கா உழைப்பை உள்ளடக்கி
படைத்தவனின் கற்பனை எல்லைகளை தாண்டி
ஓவியனின் ஓவியங்களுக்கு அருகில்
தரையில் சிந்திய வண்ணப் புள்ளிகளின் நடுவில்
அவன் கைத் துடைத்து
தூரிகை துடைத்து
வியர்வை துடைத்து போட்ட
அந்த வெள்ளைத் துண்டு
அற்புதமாய் வரைந்திருந்தான்
அந்த ஓவியன்- அவனுக்கே தெரியாமல்
சலனம்...
Subscribe to:
Posts (Atom)