மனம் நிறைய
ஆயிரமாயிரம் மின் மினிப் பூச்சிகள்
ஜன்னல் ஓரத்து இரயில் பயணத்தில்
இருள் கவியும் இது போன்ற மாலைப் பொழுதில்
தொலைவில் தெரியும் சில தி(ரு)ரி விளக்குகளை காணும் பொழுது….
........................><...................................
இருட்டு உலகத்தின்
அசைந்தாடும் பவுர்ணமியாய்- அந்த
ஒற்றை வாசல் வீட்டின் உள்ளே
ஒரு திரி விளக்கு……….
எவ்வளவு நாட்களாயிற்று…?
திரி விளக்கின் அருகாமை அனுபவித்து…
........................><...................................
காலம் காலமாய விளக்கெரிந்த
காளி கோயிலிலும் விளக்கில்லை
பாழாய் போன பல்பு ஒன்று
அநாதையாய் தொங்கிக் கொண்டிருந்தது
வயிறு வீங்கி…
சமீபத்தில் என் கிராமம் எனக்களித்த ஏமாற்றங்களில்
இதுவும் ஒன்று…
........................><...................................
செவ்வக தகரப் பெட்டியும்
பிரித்துப் போட்ட புதுத் துணியின் வாசமும்
திரி விளக்கின் அருகாமை கதகதப்பும்
மார்கழி மாத குளிருக்கு இதமாய் - மஞ்சள்
ஒளிப் பிரவாகமும்
பட்டணத்து ஏலக்காரனின் குரலை விட வசீகரமானவை…..
ஜில்லப்பா…
அப்பாவின் குரல் வரும் வரை- அநுபவிக்கும்
அந்த சுகமான ஏல அநுபவம்…. திருட்டுத் தனமாய்…
........................><................................... மார்கழி குளிரின் முன் பனிக் காலத்தில்
ஏரி மதிலில்
பள்ளம் வெட்டி
ஈசல் தழையுடன்
அந்த திரி விளக்கை ஏந்தி செல்வதுதான்
எத்தனை சுகம்- திகிலோடு…
கொட்டப் போகும் ஈசல் பூச்சிகளை நினைத்து
பரிதாபத்துடன்,
மன சாட்சி உறுத்த…. உறுத்த…..
........................><...................................
ஈரச் சோளம் மணக்க …. மணக்க….
சாயங்காலம் சோளம் அரைத்த
கல் இயந்திரத்தின் அருகே
ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் படித்து
ஆயாவிற்க்கு கதை சொன்னதும்
இது போன்ற ஒரு திரி விளக்கின்
வெளிச்சத்தில் தான்…
........................><...................................
நான் கூட அறிமுகம் செய்வேன்
என் மகனுக்கு
ஒருநாளேயினும் மின்சாரம் அனைத்து
வீடு முழுவதும்
ஒரே ஒரு திரி விளக்கேற்றி
செயற்க்கையாய்….
........................><...................................
பாதுகாக்க வேண்டும்
பேரீச்சம் பழக்காரனை எதிர் பார்க்கும் ராந்தலையும்
மாட்டுத் தொழுவத்தில் செருகி வைத்திருக்கும்
திரி விளக்கையும்
அடுத்த சந்ததிக்கு…..